மறுபிறவி

யசோதா அழுது அழுது கண் இரண்டும் உப்பி இருந்தது. சிறிது நேரத்துக்கு எல்லாம் கண்ணீர் வற்றி சுய பட்சாபம் தோன்றி அவளை வாட்டியது. எனக்கு மட்டும் ஏன் கடவுள் இப்படி ஒரு அம்மாவை தந்தார். எப்போது பார்த்தாலும் என்னை குறை கூறுவதே அம்மாவுக்கு வேலையாய் போய் விட்டது. குனியாதே! நிமிரதே! சத்தம் போடாதே! எதிர்த்து பேசாதே! என்று எப்போதும் என்னை நிம்மதியாகவே இருக்க விட மாட்டார்கள். சை! நன் பிறந்திருக்கவே கூடாது. பிறந்தது தான் பிறந்தேன், வசந்தியின் வீட்டில் பிறந்து இருக்கலாம் அல்லவா. அவள் அம்மா தான் எவ்வளவு நல்லவர்கள். என்னிடம் நிறைய அன்பு செலுத்துகிறார்கள். என்னை ஒரு வாட்டியும் அதட்டியதே இல்லை. இங்கே வந்து பிறந்து இப்படி மாட்டி கொண்டேனே. மறுபடியும் அவளுக்கு கண்ணீர் பொங்கியது. அடக்கி கொண்டாள். கூடாது. கூடவே கூடாது. அழுது ஒன்றும் ஆகப் போவது இல்லை. இந்த அம்மாவுக்கு நல்ல பாடம் ஒன்று புகட்ட வேண்டும். அப்போது தன் என் அருமை புரிந்து கொள்வாள்.

என்ன செய்யலாம்? சட்டென்று மின்னல் வெட்டியது போல் அந்த எண்ணம் தோன்றியது. வீட்டை விட்டு போய் விட்டால் என்ன? அம்மா என்னை நினைத்து தவியாய் தவிப்பார்கள். தவிக்கட்டும். அப்போது தான் என் அருமை புரியும். பின்னர் என்னை ஒன்றுமே குறை கூற மாட்டார்கள். இந்த எண்ணம் அவளுக்கு தோன்றியதுமே எங்கிருந்தோ உற்ற்சாகம் அவளிடம் வந்து ஒட்டி கொண்டது. ஆனால் எங்கே போவது? ஐயோ! எங்கே செல்லலாம் என்று தெரியவில்லையே. ஆஹா! வசந்தி வீடு இருக்கவே இருக்கிறது. அவள் வீட்டில் இன்று ஒரு நாள் மட்டும் தங்கி கொள்ளலாம். என்ன ஒரு அருமையான யோசனை. இன்று நாள் முழுவதும் அங்கே தங்கி நாளை வீட்டுக்கு வந்தால் போதும். அம்மா திண்டாடி விடுவார்கள். பின்னர் என்னை ஒரு போதும் திட்டவே மாட்டார்கள். மறுபடியும் திட்டினால் வீட்டை விட்டு சென்று விடுவேன் என்று மிரட்டியே காரியம் எல்லாவற்றையும் சாதித்து கொள்ளலாம். ஆனால் மாற்று துணியை எப்படி எடுத்து கொண்டு போவது? அம்மா கண்டு பிடித்து விட்டால் என் திட்டம் அனைத்தும் பாழ் ஆகி விடுமே. என்ன செய்யலாம்? ம்ம். அப்படி தான் செய்ய வேண்டும். தன் புத்திசாலிதனத்தை மெச்சியபடி 
தன் வீட்டு வேலைக்காரியை கூபிட்டாள்.

"விஜயா...விஜயா...இங்கே கொஞ்சம் வாயேன்"

"என்ன யசோ?"

"என் சுடிதார் ஒன்னு தரேன். அதை இஸ்திரிக்கு குடுத்துட்டு வரியா"

"குடு. இப்போவே குடுத்துட்டு வரேன்"

துள்ளி குதித்து ஓடினாள் யசோதா. தன உடையை விஜயாவிடம் அனுப்பிய பிறகு அம்மாவிடம் சென்றாள்.

"நிறைய நோட்ஸ் எடுக்க வேண்டியது இருக்கு. கடைக்கு போயிட்டு வரேன்."

"சீக்கிரம் போயிட்டு வந்துடு யசோ குட்டி"

யசோதா காதில் விழாதது போல் சென்றால். அவள் போகும் திசையை சிறிது நேரம் பார்த்து விட்டு பெருமூச்சு ஒன்றை வெளியிட்டாள் அந்த தாய்.

இந்த பெண் ஏன் இப்படி இருக்கிறாள்? எப்போது இப்படி மாறினாள்? நான் எவ்வளவு நெருங்கி போனாலும் என்னிடம் இருந்து விலகியே போகிறாளே. இந்த வயதில் மாற்றம் வருவது இயல்பு தான். ஏன்? நான் கூட என் அம்மாவிடம் இந்த பருவத்தில் எத்தனை 
எத்தனை சண்டை போட்டு இருப்பேன். அனால் மறு வினாடியே அவளை கட்டி கொண்டு சமாதன படுத்தி விடுவேனே. வாதாடுவேன். ஆனால் எதிர்த்து பேசி இருப்பேனா? ஒரு நாளாவது அவளை பிரிந்து இருப்பேனா. அம்மா அம்மா என்று அவளை சுற்றி சுற்றி வருவேனே. ஆனால் இந்த பெண் என்னை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கிறாளே. இவளது நல்லதுக்கு தான் சொல்கிறேன் என்பதை எப்போது புரிந்து கொள்வாள்? என்னை புரிந்து கொள்ளவே மாட்டாளோ? ஐயோ! என் இதயம் இப்படி பதறுகிறதே. என்னை பற்றி சிறிதாவது யோசிப்பாளா.

அன்று பிஞ்சு கால்களால் எட்டி உதைத்த போது மகிழ்ந்தேனடி
இன்று நீ உதைக்காமலே என் உள்ளம் கொதிக்குதடி


எப்போதும் வேண்டுமானாலும் வருவேன் என்று கண்ணீர் பயம் காட்டியது. அடக்கி கொண்டு வீட்டு வேலையை ஆரம்பித்தாள்.

அம்மாவிடம் தந்திரமாக பொய் சொன்னதை எண்ணி எண்ணி யசோதா மகிழ்ந்தாள். ஒரு குரூர திருப்தி உண்டாகியது. அந்த குதூகலத்துடனே வசந்தி வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். வசந்தி தான் கதவை திறந்தாள்.

"ஹாய் வசந்தி. இன்று ஒரு நாள் இங்கே தங்கலாம் என்று வந்து இருக்கிறேன். உனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லியே"

ஒரு வினாடி வசந்தி முகம் மாறியதை யசோதா கவனிக்கவில்லை.

"அதற்கு என்னடி. நீ தாராளமா இங்கே தங்கலாம். உள்ளே வா "

யசோதா உள்ளே வரவும் யார் வருவது என்று பார்க்க வசந்தியும் தாயார் வரவும் சரியாக இருந்தது.

"வா யசோ. எப்படி இருக்க?"

"நல்ல இருக்கேன் வசந்திம்மா"

அப்போது வசந்தி குறுக்கே புகுந்தாள்.

"அம்மா, யசோ இன்று ஒரு நாள் மட்டும் இங்கே தங்குவதற்கு வந்து இருக்கிறாள். "

"ஒ! இதுவும் அவள் வீடு போல தானே. உன் அறையில் அவளை இருக்க வைத்து விட்டு வா. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. ஒத்தாசை செய்து விட்டு போ. பின் இரண்டு பெரும் சேர்ந்து சாப்பிடலாம். "

யசோ வசந்தியின் அறையில் நுழைந்தாள். ஆஹா! என்ன அருமையான அறை. இங்கே வந்தால் திரும்பி செல்ல மனசே வராதே. குடுத்து வைத்தவள் அந்த வசந்தி. ம்ம்...எத்தனை நேரம் தான் இங்கே இருப்பது. கீழே சென்று நாமும் சிறிது ஒத்தாசை செய்வோம்.

சமையல் அறைக்குள் நுழையும் முன்னர் அங்கு ஏதோ பேச்சு குரல் கேட்டு நின்றாள்

"எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் அந்த யசொதாவுடன் பழகுவதை நிறுத்து என்று. என் பேச்சை கேட்க கூடாது என்ற முடிவுடன் இருக்கிறாயா? இன்று நம் வீட்டிலேயே தங்க வந்து விட்டாள். சை! அவளும் ஒரு பெண்ணா? அவள் அம்மாவை பற்றி என்னிடமே அவதூறாக பேசுகிறாள். என்னை பற்றியும் மற்றவர்களிடம் இப்படி தான் பேசுவாள். கொஞ்சமாவது அம்மா சொல்வதை கேட்கிறாளா. யாருக்கும் அடங்காதவள் என்று பெயர் எடுத்தவளிடம் உனக்கு எதற்கு நட்பு. இன்று தான் உனக்கு கடைசி எச்சரிக்கை. இன்றுடன் அவளின் சகவாசத்தை முடித்துக்கொள்."

அதற்கு மேல் அங்கே நிற்க பிடிக்காமல் யசோதா வீட்டின் 
கொல்லைப்புறத்துக்கு வந்தாள்.

இப்போது என்ன பண்லாம்? வசந்திம்மா கூட இப்படி இருப்பார்கள் என்று நான் நினைக்கவே இல்லையே. பாவம் வசந்தி. அவளும் நம்மை போல் எவ்வளவு கஷ்டபடுகிறாள். நானாவது அம்மாவை பற்றி அவளிடம் கூறி ஆறுதல் அடைகிறேன். அவள் அது கூட செய்வதில்லையே. எப்போதும் அவளின் அம்மாவை பற்றி பெருமையாக தானே பேசுவாள். பாவம்! மனசுக்குள் வேதனை வைத்துக்கொண்டு நம்மிடம் பொய்யாக சொல்லி இருக்கிறாள். இப்போது என்ன பண்ணலாம்? பேசாமல் நம் வீட்டுக்கே சென்று விடலாமா? ஐயோ! அந்த நினைப்பே பிடிக்கவில்லையே. பின் எப்படி தான் அம்மாவுக்கு பாடம் புகட்டுவதாம்?

அப்போது தான் அந்த சத்தத்தை கவனித்தாள். வீட்டின் பின் அறையில் யாரோ முனகும் சத்தம் கேட்டது. யாராக இருக்கும் என்று அவள் யோசிக்கும் போதே வசந்தி அங்கே வந்து சேர்ந்தாள்.

"இங்கே என்னடி செய்யுற? உள்ளே போகலாம் வா"

"அது இருக்கட்டும். அந்த அறையில் என்னடி சத்தம்?"

"ஒ அதுவா. என் அக்கா தான்டி. அவர்கள் உண்டாகி இருப்பது தெரியும் அல்லவா? நாள் நெருங்கி விட்டது. மருத்துவச்சியை அழைத்து வர அப்பா சென்று இருக்கார்கள். "

"என்னடி இது? மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லையா? "

"இந்த ஊரில் ஒரே மருதுவமணி தானடி. அங்கே ஆண் மருத்துவர் தான் இருக்கிறார். அதனால் அங்கே கொண்டு செல்ல கூடாது என்று அவர்கள் வீட்டில் சொல்லி விட்டனர். அதனால் தான் இப்படி செய்ய வேண்டியதாகி விட்டது"

வசந்தி கூறிக்கொண்டு இருக்கும்போதே அவளின் அப்பா ஒரு பாட்டியை அழைத்து வந்து கொண்டு இருந்தார். வசந்தியின் தாயாரும் வந்து விட்டார்கள். அந்த பாட்டி வசந்தியின் நாடியை சிறிது நேரம் பிடித்து விட்டு சொன்னாள்.

"சரியான் நேரத்துக்கு தான் வந்து இருக்கிறோம். இன்னும் கொஞ்சம் நேரத்தில் குழந்தை பிறந்து விடும்"

வசந்தியின் அக்காவின் முனகல் இப்போது மிகவும் அதிகமாகி விட்டது. யசோதாவுக்கு இதை எல்லாம் பார்ப்பதற்கு மிகவும் பயமாக இருந்தது. ஆனால் அவளின் ஆவல் அவளை அங்கிருந்து வெளியே செல்ல விடவில்லை. நல்ல படியாக பிரசவம் ஆக வேண்டுமே என்ற கவலையில் யாரும் அவள் அங்கு நிற்பதை கண்டு கொள்ளவும் இல்லை.

நேரம் ஆக ஆக வசந்தியின் அக்கா ஓலமிடுவதை போல கத்த தொடங்கினாள். ஐயோ! என்ன இது? இப்படி கதறுகிறாளே . ஏன் அந்த மருத்துவச்சி ஒன்றும் செய்யவில்லை. ஒ! காலை விரித்து வைக்கிறாளே. பாவம் அந்த அக்கா. என்ன பாடு படுகிறாள். அவள் கண்களில் தான் எவ்வளவு பயம். ஆ! அவளை முக்க சொல்கிறாளே. ஐயோ! என்ன செய்கிறார்கள் அந்த அக்காவை. பயமா இருக்கிறதே. அதோ! ஏதோ தெரிகிறதே. ஒ! அது பாப்பாவின் தலை அல்லவா. ஆஹா! எவ்வளவு சிறியதாக இருக்கிறது. ஒ! இதென்னை இப்படி கத்துகிறாள் இந்த அக்கா. ரொம்ப வலிக்கிறது போல் பாவம். ஆ! தலை முழுவதுமாக வெளியில் வந்து விட்டதே. அதோ! மற்ற உறுப்புகளும் வந்து விட்டதே. ஐயோ! அந்த பாபாவை என்ன செய்கிறா
ள். ஏன் தலை கீழாக தொங்க விடுகிறாள். அந்த மருத்துவச்சிக்கு இருதயமே இல்லையா? அந்த குழந்தையை ஏன் இப்படி துன்பப் படுத்துகிறாள். ஆ! குழந்தை அழுகிறதே. அதற்கு வலிக்கிறது போல் பாவம். அதை கட்டி அணைத்துக்கொள்ள வேண்டும் போல் ஆசையாக இருக்கிறதே. என்னிடம் தருவார்களா? அதோ! அந்த அக்கா ஏன் அழுகிறாள். குழந்தையை அனைத்து கன்னத்தில் மாறி மாறி முத்தமிடுகிறாளே. ஆ! என்ன இது? எனக்கும் ஏன் அழுகை வருகிறது?

சட்டென்று யோசொதாவுக்கு அவளின் பாட்டி முன் ஒரு நாள் சொன்னது ஞாபகம் வந்தது. அம்மா நான் பிறந்த உடன் என் கன்னத்தில் முத்தமிட்டு மயக்கமாகி விட்டதாக சொன்னார்கள். ஆனால் வேறொன்றும் கூறவில்லையே. அம்மாவும் இந்த அக்க மாதிரி தானே துன்பப் பட்டிருப்பார்கள். ஐயோ! இதை ஏன் அன்று பாட்டி என்னிடம் கூறவில்லை. அம்மாவும் இப்படி தானே அழுது இருப்பார்கள். இந்த வேதனை எல்லாவற்றையும் தாண்டி தானே என்னை பெற்று இருப்பார்கள். என்ன காரியம் செய்து விட்டேன். அம்மா என்னை நினைத்து துடிக்க வேண்டும் என்று எண்ணி அல்லவா வீட்டை விட்டு வந்தேன். நான் செய்தது எவ்வளவு பெரிய பிசகு? இதனை நாளும் அம்மாவை சரியாக புரிந்து கொள்ளாமல் ஏதேதோ பேசி அவர்களை நோகடித்து விட்டேனே. ஆனால் ஒரு நாளும் அம்மா அதறகாக என்னை ஒதுக்கியதே இல்லையே.

தன் செயலின் தீவிரம் உணர்ந்து ஒ என்று அழ தொடங்கினாள்.

அப்போது தான் அவள் அங்கு இருப்பதை வசந்தியின் அம்மா கவனித்தார். பெண்ணுக்கே உண்டான தாய் பாசத்தில் அவளை மார்புடன் அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறினாள்.

"ஒண்ணுமில்லை என் செல்லமே! 
பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறு பிறவி போல. எல்லாம் சரி ஆகி விட்டது. இதோ பார் குட்டி பாப்பா. அழகாக சிரிகிறது பார். நீ தொட்டு பார்கிறாயா?"

யசோதா தயங்கி தயங்கி அக்குழந்தையை தொட்டால். ஆஹா! என்ன இது. பஞ்சு போல் அல்லவா இருக்கிறது. இவர்களும் எவ்வளவு அன்புடன் என்னை தேற்றினார்கள். நான் தான் இத்தனை நாள் எதையும் புரிந்துக் கொள்ளாமல் இருந்து இருக்கிறேன்.

அவளையும் அறியாமல் அவளும் ஒரு மறு பிறவி எடுத்து இருந்தாள்.

"வசந்திம்மா! எனக்கு உடனடியாக என் அம்மாவை பார்க்கணும் போல இருக்கிறது. நான் இன்னொரு நாள் வரேன்" என்று கூறி சிட்டென பறந்து விட்டாள்.

யசோதா இன்னும் வரவில்லையே என்று கவலையுடன் காத்திருந்தாள் அவளின் 
தாயார்.

யசோதா ஓடோடி சென்று அவளை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள்.

"அம்மா! இனிமேல் நான் உன்னுடன் சண்டையே போட மாட்டேன் சரியா. ஒரு வேளை போட்டாலும் உடனே சமரசம் ஆகி விட வேண்டும்"

என்று கூறிய மகளின் திடீர் மாற்றம் புரியாவிட்டாலும் நெகிழ்ந்து அணைத்துக் கொண்டாள்.

Comments

Popular posts from this blog

The Buzz

Execution

Hit and Run