திக் திக் நிமிடங்கள் - 2

இருவரையும் அந்த காட்சி முகத்தில் அடித்தது. அகில்-க்கு சர்வமும் அடங்கி போனது. அவனால் ஒரு அங்குலம் கூட நகர முடியவில்லை. மதி மயங்கி விழுந்தாள். அவள் விழும் சத்தம் கேட்டு தான் அகில் சுய நினைவுக்கு வந்தான். அவளை தூக்கிக்கொண்டு கட்டிலில் போட்டு தண்ணீர் தெளித்தான்.

லேசாக கண் விழித்தாள். "அ..அ...அகி..அகில்.." அவளுக்கு பேச்சே வரவில்லை. இதற்குள் அகில் முழுதும் சுதாரித்து இருந்தான்.
"பதட்டப்படாதே ப்ளீஸ் மா, எனக்கும் ரொம்ப அதிர்ச்சியாக தான் இருக்கு. ஆனால் இப்போ நாம் நல்லா யோசிக்கணும். யாரோ நம் மேல் பழி விழ வேண்டும் என்பதற்காகவே இப்படி செய்திருகார்கள்."

"ஐயோ, இப்போ என்ன பண்ணலாம்? எனக்கு ஒன்னுமே புரியலையே. யாரு இப்படி செஞ்சுருபாங்கனு தெரியலையே. போலிசுக்கு கால் பண்ணலாமா? "

"இல்லை மா, கொஞ்சம் பொறு. யோசிச்சு நல்ல முடிவா எடுப்போம். முள் மேல் விழுந்த சேலை போல தான் செயல் படனும் டா."

அந்த சடலத்தை நெருங்கி பார்த்தான். தலை முழுக்க இரத்தம். யாரோ ஏதோ ஆயுதத்தால் மண்டையில் அடித்து இருக்கார்கள். அதிகப்பட்சம் 30 வயது இருக்கலாம். நல்ல கருப்பு. அகில்-க்கு நன்றாக புரிந்தது. போலிசிடம் சென்றால், அவர்கள் கண்ணை மூடி கொண்டு இவர்களை தான் கூண்டில் ஏற்றுவார்கள். அதன் பின் ஜெயில், கோர்ட், கேஸ், தூக்கு தண்டனை...

தலையை வேகமாக ஆட்டிக்கொண்டான். இல்லை! இல்லவே இல்லை!! எவனோ செய்த சதிக்கு நாம் பலி ஆக கூடாது. மதியிடம் சென்றான்.

"நான் இதை கார் டிக்கி-இல் போடுறேன். நீ இங்கேயே இரு" என கூறிவிட்டு வெளியே சென்றான்.

அந்த சடலத்தை வெகு சிரமப்பட்டு வெளியே இழுத்து சென்றான். எவரும் இருக்கார்களா என சுற்றும் முற்றும் நோட்டம் விட்டான். எவரும் இல்லை என்று சரி பார்த்து விட்டு கார் டிக்கி-ஐ திறந்தான். அந்த சடலத்தை டிக்கி-இல் போட்டு மூடினான். கூடவே ஒரு கடப்பாறை-யும் தோட்டத்தில் இருந்து கொண்டு வந்தான். சரியாக மதி-யும் வீட்டை பூட்டிவிட்டு வந்தாள். இருவரும் காரில் புறப்பட்டார்கள்.

இரவு மணி 11:45. மழை தன் முழு பலத்தையும் காட்டி கொண்டு இருந்தது . அகிலன் ஒரு கையில் சிகரெட் பிடித்து கொண்டு இன்னொரு கையால் லாவகமாக கார்-ஐ ஒட்டிக்கொண்டு இருந்தான். பக்கத்தில் மதி அந்த A.C குளிரிலும் உடல் முழுதும் வியர்த்து இருந்தாள்.

"அகில், நாம் செய்வது சரி இல்லை. போலீஸ் நமக்கு உதவ தான் இருக்கார்கள். நாம் அவர்களிடம் போவதே மேல். ப்ளீஸ், நான் சொல்வதை கேளு."

"கொஞ்சம் கூட யோசிக்காம பேசுறியே மதி. அடுத்த மாதம் ஒரு ப்ராஜெக்ட் விஷயமா U.S போக சான்ஸ் கிடச்சுருக்கு. இப்போ போய் கோர்ட் கேஸ்னு அலைந்து கொண்டு இருக்க முடியாது புரிஞ்சிக்கோ. கொஞ்சம் நேரம் எதுவும் பேசாமல் வா."

சிறிது நேரம் அவர்களின் வேகமான இதய துடிப்பு தவிர எந்த சத்தமும் எழவில்லை. அப்போது திடீரென கார் கிரீச்சிட்டு நின்றது. ஏன் அகில் இப்படி சட்டென்று பிரேக் போட்டான் என மதி கலவரத்தோடு வெளியே பார்த்தாள். ஒரு போலீஸ் அதிகாரி அவர்களை நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

அகில் தனக்குள் எழுந்த படபடப்பை தன் முகத்தில் காட்டாமல் இருக்க மிகவும் கஷ்டப்பட்டான். மதி தான் மிகவும் திணறி போனாள். பயத்தில் அவள் முகமே வெளிறி விட்டது. ஒரு வேளை கார் டிக்கியை திறக்க சொன்னால்??

அகிலன் தான் முதலில் சுதாரித்து சிரித்த முகத்துடன் கேட்டான்.
"ஹலோ, என்ன சார், லிப்ட் எதுவும் வேண்டுமா?" (மனதுக்குள் வேண்டாம் என அவர் கூற வேண்டும் என வேண்டிக்கொண்டே)

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். இந்த நடு ராத்திரியில் ஏன் இவ்ளோ வேகமாக வரீங்க?"

"சாரி சார், நைட் ஷோ சினிமா பார்த்தோம். லேட் ஆய்டுச்சு. மழை பெய்வதால் சீக்கிரமா வீட்டுக்கு போயிட்டு இருக்கோம்"

"சரி, பார்த்து பத்திரமா போங்க. ரொம்ப வேகமும் மழை பெய்யும் இந்த நேரத்தில் சரி இல்லை." என கூறியபடியே வழி விட்டார். இருவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

சிறிது தூரத்தில் ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அகில் வண்டியை நிறுத்தினான்.
"மதி, இங்க ஒரு காலி இடம் இருக்கு பாரு, இங்க புதச்சுடலாம். யாரும் நம்மை சந்தேகப்பட மாட்டார்கள். நீ இங்க கார் பக்கத்துலயே யாரும் வருகிறார்களா என பார்த்துக்கொண்டு நில். நான் பள்ளம் தோண்டி முடுச்சுட்டு வரேன்."

"சீக்கிரம் வாங்க அகில், எனக்கு ரொம்ப பயமா இருக்கு"

அகில் அந்த காலி இடத்தில் நுழைந்தான். ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் குழி தோண்ட ஆரம்பித்தான். அகில் நல்ல உடல் ஆரோக்யத்துடன் இருப்பவன் தான். ஆனால் அன்று நடந்த சம்பவங்களால் அவன் மிகவும் கலைத்து போய் இருந்தான். சிறிது ஆழம் தோண்டும் முன் அவனுக்கு மூச்சு முட்டியது. இன்னும் கொஞ்சம் தான் என தனக்குள் சொல்லிக்கொண்டே இருந்தான். ஒரு வழியாக முடிக்கும்போது மதி அவனிடம் வந்துவிட்டாள்.

"ஐயோ, நான் உன்னை அங்கே இருக்க சொன்னேன் இல்லியா? யாரவது பார்த்து விட்டால் நம் கதை முடிந்து விடும். கொஞ்சம் கூட யோசனை இல்லாமல் இங்கே வந்து விட்டாயே."

"நீ வீரமா சொல்லிட்டு வந்துட்ட. ஒவ்வொரு நொடியும் ஒரு பிணத்துக்கு பக்கத்தில் நிற்க எனக்கு எவ்வளவு பயமா இருக்கு தெரியுமா?

"சரி வா, ரெண்டு பெரும் சேர்ந்து தூக்கிக்கொண்டு வந்து புதைத்து விடலாம்"

கார்-இன் பின் பக்கம் சென்று டிக்கியை திறந்தார்கள். இருவரும் திடிக்கிட்டு போனார்கள். அங்கே அந்த சடலம் இல்லை...

Comments

Popular posts from this blog

The Buzz

Execution

Hit and Run